செட்டிநாடு பலாக்காய் கறி(Chettinad palakkay curry )

Monday, March 20, 2017

குரங்குக் கை

ஒரு சிறிய காடு. அங்குள்ள ஒரு மரத்தில் இரண்டு தூக்கணாங் குருவிகள் கூடுகட்டி வாழ்ந்துவந்தன. அதே மரத்தில் ஒரு குரங்கும் வசித்துவந்தது. தூக்கணாங்குருவிகள் தன் கூட்டில் ஓய்வெடுக்கும்போது, அந்தக் குரங்கு மரக்கிளையில் சாய்ந்துகொண்டு ஓய்வெடுக்கும்.

இதனைப் பார்த்த ஆண் தூக்கணாங்குருவி, ‘குரங்கே நீயும் எங்களைப் போல ஒரு கூடுகட்டிக்கொண்டு அதில் வாழலாமே! என்றது.

குரங்கு, ‘எனக்குக் கூடுகட்டத் தெரியாது’ என்றது.

‘கைகள் இல்லாத நாங்களே கூடுகட்டும்போது கைகள் இருக்கும் நீ ஏன் கூடுகட்டப் பழகிக்கொள்ளக் கூடாது?’ என்றது ஆண் தூக்கணாங்குருவி.

‘நான் எதைப் பழகவேண்டும் என்பது எனக்குத் தெரியும். நீ எனக்கு அறிவுரை கூறவேண்டாம்’ என்று குரங்கு கூறியது.

அப்போது பெண் தூக்கணாங்குருவி, ஆண் குருவியைப் பார்த்து, ‘உங்களுக்கு ஏன் இந்த வேலை? அந்தக் குரங்கு கூடுகட்டினால் என்ன, கட்டாவிட்டால் நமக்கு என்ன? நீங்கள் ஏன் அந்தக் குரங்குக்கு அறிவுரை கூறுகிறீர்கள். அந்தக் குரங்கு கோபப்பட்டு ஏதாவது செய்துவிட்டால் நமக்குத்தானே தொல்லை. உங்களுக்கு அறிவேயில்லை! ’ என்று திட்டி அடக்கியது.

ஒருநாள் அந்தக் காட்டில் பெரும் புயற்காற்று வீசியது. கனமழை பொழிந்தது. அந்த மரமே ஆடியது. இரண்டு தூக்கணாங் குருவிகளும் தன்கூட்டில் பத்திரமாக அமர்ந்துகொண்டு மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன.

அப்போது குரங்கு மட்டும் மழையில் நனைந்து, குளிரில் நடுங்கியபடியே அந்த மரத்திற்கு வந்தது. அதனைப் பார்த்த இரண்டு தூக்கணாங்குருவிகளும் இரக்கப்பட்டன.

பெண் தூக்கணாங்குருவி, ‘அந்தக் குரங்கிடம் ஏதும் பேசாமல் அமைதியாக இருங்கள்!’ என்று ஆண் குருவியிடம் சொன்னது.

ஆனால் ஆண் தூக்கணாங்குருவி அதைக் கேட்காமல், குரங்கைப் பார்த்து, ‘ஏய், குரங்கே! ஒரு கூடு கட்டிக்கொள் என்று நான் அன்றே உனக்கு அறிவுரை கூறினேன் அல்லவா? அப்போதே உன் கைகளால் கூடுகட்டப் பழகியிருந்தால், இன்று
ஒரு கூட்டினைக் கட்டியிருப்பாய். எங்களைப் போல நீயும் மழையில் நனையாமல் நிம்மதியாக இருந்திருக்கலாம். நீ தான் என் பேச்சைக் கேட்கவில்லை. இப்போது அவஸ்தைபடுகிறாய்!’ என்றது.

குரங்குக்கு அவமானமாக இருந்தது. ‘இந்தச் சின்னக் குருவி நமக்கே அறிவுரை கூறுகிறதா!’ என்று நினைத்துக் கோபப்பட்டது. ‘எனக்குக் கைகள் இருக்கிறது. அந்தக் கைகளுக்குக் கூடு கட்டத்தெரியாது. ஆனால், ஒரு கூட்டினைப் பிரித்துவிட அந்தக் கைகளுக்கு நன்றாகத் தெரியும்’ என்று கூறி, அந்தத் தூக்கணாங்குருவிகளின் கூட்டினைப் பிரித்துப் போட்டுவிட்டது.

அந்தக் குரங்கினைப் போலவே, இந்த இரண்டு தூக்கணாங்குருவிகளும் மழையில் நனைந்து, குளிரில் நடுங்கத் தொடங்கின.

‘ஆதலால், நீ எனக்கு அறிவுரை கூறினால், உனக்கு அந்தத் தூக்கணாங்குருவிகளின் நிலைதான் ஏற்பட்டுவிடும்’ என்று கூறியது குரங்கு.

முதலை, ‘நண்பா! நான் முட்டாள்தான், குற்றவாளிதான். என்னை மன்னித்துவிடு. நான் உன்னுடைய பழைய நண்பன்தானே! நீ எனக்கு ஒரு யோசனையைக் கூறு. நான் எப்படி என் வீட்டைத் திரும்பப் பெறுவது?’ என்று கேட்டது.

குரங்கு, ‘நல்லவனுக்குக் கும்பிடும், சூரனுக்குப் பேதமும் காரியக்காரனுக்குத் தாளமும் ஈடானவனுக்குத் தண்டமும் செய்தாற்போலச் செய்யவேண்டும்’ என்று ஒரு யோசனையைக் கூறியது.

‘அது எப்படி? எனக்கு விளக்கமாகக் கூறு?’ என்ற முதலைக்கு அந்தக் குரங்கு கதை ஒன்றினைக் கூறியது.

No comments:

Post a Comment